EMAN :கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை

Posted by S Peer Mohamed (peer) on 1/11/2012

மீண்டும் மதீனாவை நோக்கி - திரும‌தி: அனிசா அலி, துபை.

முன்னுரை:
 நெற்பயிர் நாற்றங்கால்களில் விதைக்கப்பட்டு பின்பு அந்நாற்றுக்கள் பிடுங்கி வயல்களில் நடப்படுவது , போல இஸ்லாம் மக்கா என்னும் தாய்நகரத்தில் விதைக்கப்பட்டு அங்கிருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்து விருட்சமாகி உலகமெல்லாம் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. யத்ரிப் என்னும் அந்நகரம் மதீனத்துன்நபி எனும் நபியின் நகரமாகி உலக வரலாற்றில் நீங்காத இடம் பெற்றது. அத்தகைய பெரும் பேறை மதீனா அடைய என்ன காரணம் என்பதை ஆராய்வோம்.

மதீனாவின் சிறப்பு:
சமீபத்தில் இறந்து விட்டதாக கருதப்படும் இமாம் அன்வர் அவ்லக்கி அவர்கள் தனது மறுமை நாள் என்னும் உரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். 1970 களில் அமெரிக்க அரசாங்கம் மதுவிலக்கு சட்டத்தை அமல் செய்தது. பெரும் பொருட்செலவில் ராணுவம் மற்றும் காவல் துறையின் உதவிகளோடு மது தயாரிப்பை தடை செய்தது. எனினும் மதுவை ஒழிக்க அவர்களால் முடியவில்லை. கள்ளச் சாராய தயாரிப்பு, அதனால் பலரின் உயிரிழப்பு காரணமாக அந்தச் சட்டத்தையே கைவிட வேண்டி வந்தது. இதற்கு நேர் மாறாக நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மது அருந்துவதை அல்லாஹ் தடை செய்து இருக்கிறான் என்று அறிவித்த போது, உடனடியாக மதுப்பானைகள் உடைக்கப்பட்டன. அன்று மதீனாவின் தெருக்களில் மது ஆறாக ஓடியது. மது அருந்திக் கொண்டிருந்த சிலர் வாயில் உள்ளதை உடனே துப்பினர். வேறு சிலர் வாந்தி எடுத்து வெளியேற்றினர். அந்த அளவுக்கு எந்த பொருட் செலவுமின்றி எந்த ராணுவத்தின் துணையுமின்றி மதுவிலக்கு உடனடியாக அமலுக்கு வந்தது.

இத்த்கைய மகத்தான வித்தியாசத்துக்கு என்ன காரணம் ரஸூல் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை அமல் படுத்தும் முன்பு மதீனா மக்களின் மனதில் மரணம், மண்ணறை வாழ்வு, சுவனம், நரகம், இறைவனின் தண்டனை ஆகியவை குறித்து ஆழப் பதியச் செய்திருந்தார்கள். இதன் காரணமாகவே அல்லாஹ்வின் கட்டளை இறங்கியபோது அதை உடனடியாக நிறைவேற்றுவதில் அம்மக்கள் அபார வெற்றி கண்டனர். மதீனா முனவ்வராவாக ஒளிர்ந்தது. அதன் பிரகாசம் உலகம் முழுமைக்கும் உதாரணமாக ஆனது. இன்றும் ஆகிறது.

ஏர்வாடியின் நிலை:
நமதூர் மக்களை பொறுத்தமட்டில் மறுமை வாழ்வு என்பதை பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. வளைகுடா வாழ் சகோதரர்கள் மத்தியில் இதன் விழிப்புணர்வு காணப் பட்டாலும் ஊரைப் பொறுத்த வரையில் மிக மிகக் குறைவு. இறையுணர்வின்றி தொழுகை, நோன்பு பேணாதவர்கள் ஒருபுறம். அது மட்டுமன்றி நல்ல தொழுகையாளிகளாக இருப்பவர்கள் கூட தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் மட்டும்தான் இஸ்லாம் என்ற எண்ணமே கொண்டுள்ளனர். கருணையாளனும், பெருங்கிருபையுடையவனாகிய அல்லாஹ் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக நாம் செய்ய வேண்டிய பர்ளு கடமைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கூட நாம் தவ்பா செய்யும்போது கட்டாயம் மன்னிக்கிறான். ஆனால் பிற மனிதர்களிடம் பட்ட கடன், பிறரின் பொருட்களை மோசடி செய்வது, நமது சொல் , செயல்கள் மூலமாக பிறரை புண் படுத்துவது என்பது போன்ற அநீதங்களுக்கு அதனால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பதில்லை. மேலும் கியாமத் நாளில் படைப்பினங்கள் யாவும் வல்ல ரஹ்மானின் முன்பு விசாரிக்கப்படும்போது அநீதம் இழைத்தவரிடமிருந்து நன்மைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவரின் கணக்கில் சேர்க்கப்படும். ஸுபுஹானல்லாஹ். அல்லாஹ் நீதியாளன். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மறுமை வாழ்வு குறித்த விழிப்புணர்வு, ஈகை, இரக்கம், புறம் பேசாமை, வாய்மை, பெற்றோரிடம் அன்பு, மூத்தோரிடம் மதிப்பு, அண்டை அயலாரிடம் நட்புறவு, இரத்த சொந்தங்களை பேணுதல் போன்ற இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் முக்கியத்துவம் பற்றி நமதூர் மக்கள் மிகவும் அறியாமையில் இருக்கிறார்கள். அதனைப் பற்றிய விழிப்புணர்வை நமது ஏர்வாடி வாழ் சகோதர, சகோதர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே மீண்டும் மதீனாவை நோக்கிய நமது பயணத்தின் முதல் அடி என நான் கருதுகிறேன்.

மாற்றத்துக்கான வழிகள்

நமது ஊர் மஸ்ஜிதுகளின் இமாம்கள் ஒவ்வொரு மாதத்திலும் உள்ள நான்கு ஜும்மாக்களில் குறைந்தது ஒரு ஜும்மாவிலாவது மரணம், மறுமை வாழ்வு குறித்து கடுமையான வார்த்தைகளில் எச்சரிக்க வேண்டும்..

ஜும்மா சொற்பொழிவின்போது ஊரில் நடக்கும் இணைவைப்பு, தவறான உறவுகள், வட்டி, ஹலால்- ஹராம் பேணாமை, ஊரின் ஒற்றுமையை குலைத்தல் போன்ற தவறுகளை யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி வன்மையாக கண்டிக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளை இணையத்திலிருந்து தரவிறக்கம் (download) செய்து, பொது ஒலி பெருக்கிகள் அமைத்து அந்தந்த முஹல்லாக்களில் பெரும்பாலானவர்களின் ஓய்வு நேரத்தை தேர்வு செய்து, அந்நேரத்தில் ஒலி பரப்ப வேண்டும்.

குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் தடையின்றி ஒலி பரப்புவதன் மூலம் தவறாமல் வாரம் ஒரு முறையேனும் மார்க்க விசயங்களை அறிய வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து முஹல்லாக்களும் சேர்ந்து மாதம் ஒருமுறை முப்திகளை அழைத்து மார்க்கம் சம்பந்தப்பட்ட நடைமுறை சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும்.

இளம் வாலிபர்கள், யுவதிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மார்க்க விசயங்களை மற்றவர்களுக்கு எத்தி வைப்பதற்கான பயிற்சி அளிக்க வேண்டும்.

இஸ்லாமிய வாடகை நூலகம் ஒன்று நிறுவி ஒவ்வொரு முஹல்லாவுக்கும் வாரம் ஒரு முறை என வீடுகளுக்கு சைக்கிள் மூலம் புத்தகங்களை விநியோகித்து திரும்ப பெறலாம் இதனால் நல்ல இஸ்லாமிய புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த முடியும்..

ஆண்டு தோறும் நூலக உறுப்பினர்களுக்கிடையே வினாடி வினா போட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடத்தி பரிசளிக்கலாம். அதிக புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கும் பரிசுகள் வழங்கலாம்.

மதீனத்து பெண்களின் நிலை:
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக, தீனை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பவர்களாக, குர்ஆனை மனனம் செய்தவர்களாக, அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவர்களாக திகழ்ந்தனர். உதாரணம் அன்னை ஆயிஸா (ரலி), அன்னை ஹப்ஸா (ரலி) . போர்க்களங்களுக்கு சென்று வாளேந்தி போரிட்டதோடு மட்டுமல்லாமல், காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, தாகத்துக்கு நீர் புகட்டி தாதிகளாகவும் பணியாற்றியுள்ளனர். உதாரணம் நுஸைபா (ரலி), உம்முசுலைம் (ரலி). இங்ஙனம் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் அனைத்துக் காரியங்களிலும் கை கொடுத்து உதவும் உதாரண மங்கைகளாக திகழ்ந்தனர்.

ஏர்வாடி பெண்களின் நிலை:
நமதூர் பெண்களில் பெரும்பாலானோர் தொழுகையில் பொடும் போக்காக உள்ளனர். கல்வி அறிவு மிகவும் குறைவு. மறுமை பற்றிய அறிவு, ஃபர்தாவின் அவசியம், அன்னிய ஆண்கள் முன் பேண வேண்டிய ஒழுக்கங்கள், கணவனுக்கு அடி பணிவதின் அவசியம், மஹ்ரம் பற்றிய அறிவு ஆகியவை மிகக் குறைவு. படித்த இபாதத்தான பெண்களிடம் கூட இஸ்லாத்துக்கு ஏற்படும் இடையூறுகள், உலகம் மயமாக்கலின் (Globalization) தாக்கம், ஊடகங்கள் (MEDIA), ஃபேஸ் புக், ஆர்குட் போன்ற சமூகஈ இணைய தளங்கள் மூலம் குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்புகள், RSS, சிவசேனா போன்ற அமைப்புகளின் சதித் திட்டங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வு இல்லை. மதீனத்து பெண்களை போல் நமது பெண்களும் நம்மைச் சூழ்ந்துள்ள ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். அதுவே எதிர்கால தலைமுறையை காக்கும் வழி.

மாற்றத்துக்கான வழிகள்:
முஹல்லா தோறும் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் வாரம் ஒரு முறை ஒருவரின் இல்லத்தில் கூடி மார்க்க சொற்பொழிவுகள் கேட்பது , தங்கlளுக்குத் தெரிந்த ஒரு நபி மொழியோ, படித்த ஒரு ஆக்கத்தையோ பகிர்ந்து கொள்ளவேண்டும். கற்பு நெறி பேணுதல், பர்தாவின் முக்கியத்துவம் குறித்து இவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும்.

எல்லா மகளிர் குழுக்களையும் மாதம் ஒரு முறை ஒன்றுகூட்டி ஏதாவது ஒரு துறை வல்லுனர் / ஒரு மார்க்க அறிஞரை வரவழைத்து அவர்களின் ஆலோசனை பெறலாம்.

தற்போது தமிழகத்தில் உள்ள பல சுயதொழில் மகளிர் குழுக்களுக்கு தனியார் நிறுவனங்கள் சலுகை விலையிலும், சில அரசு நிறுவனங்கள் இலவசமாகக் கூட வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்குகின்றன. அத்தகைய பயிற்சிகளுக்கு ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அல்லது

அத்தகைய பயிற்சிகளை நமதூரில் நடத்த ஆவன செய்யலாம்.. உதாரணமாக கணினி பயிற்சி, தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி பயிற்சி, உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், கைவினை பொருட்கள் தயாரிப்பு, ஊறுகாய், மசாலா பொருட்கள் தயாரிப்பு போன்றவை.. இதன் மூலம் பெண்களிடையே தொலைக்காட்சியின் பாதிப்புகள் குறையும். குடும்ப வருமானமும் பெருகும்.

திருமணம் நிச்சயமான உடன் மணமகள்களுக்கு தகுதி பெற்ற முஸ்லிம் பெண் வல்லுநர் மூலம் உடல் ரீதியான, மனரீதியான, ஆன்ம ரீதியான கவுன்சலிங் (physical, psychological,and spiritual) வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் திருமணத்தின் புனிதம், கணவனின் திருப்தியை அடைவது சுவனத்துக்கு செல்வதற்கான முக்கியமான அம்சம், குழந்தை வளர்ப்பு போன்ற விசயங்கள் போதிக்கப் பட வேண்டும். இதனால் விவாக ரத்துக்கள் குறையும் வாய்ப்புகள் உண்டு. இன்ஸா அல்லாஹ்

ஒவ்வொரு முஹல்லாவிலும் ஓய்வு பெற்று பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இருக்கும் முதியவர்கள் ஆண்களை தெரிந்தெடுத்து அந்த முஹல்லாக்களில் உள்ள வீடுகளில் பெண்கள் தனியே இருக்கும் போது அன்னிய ஆடவர்கள் வர நேரிட்டால் ( மின் வாரிய ஊழியர், தொலைபேசி ஊழியர், தச்சர், கொத்தனார், போன்றவர்கள்) அவர்கள் பணி முடியும் வரை யாராவது ஒரு முதியவர் உடனிருக்கச் செய்ய வேண்டும்.

இந்த முதியவர்களின் அனுமதியின்றி எந்த அன்னிய ஆடவரும் முஹல்லா பெண்களிடம் பேசக் கூடாது என்பதை கணவர்களும் கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும். மீறி நடப்பவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும்.

மதீனாவில் கல்வியின் நிலை:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிக்கு பின்பு பல்வேறு கோத்திரத்தவர்களும் குழுக்குழுவாக வந்து இஸ்லாத்தின் நெறிமுறைகளை கற்றறிந்தனர் .அவர்கள் திரும்பிச் சென்று வரமுடியாதவர்களுக்கு கற்பித்தனர். மதீனா கல்வியின் தலைநகராக திகழ்ந்தது. வல்லவனே தனது தூதர் மூலம் உன்னத ஸஹாபாக்களை பயிற்றுவித்த பொற்காலமல்லவா அது.

நமதூரில் கல்வியின் நிலை:
முன்பு போல் இல்லாமல் கல்வியில் மக்களின் ஆர்வம் அதிகரித்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ். எனினும் குழந்தைகளுக்கு முறையான வழிகாட்டல் இல்லை. பெரும்பாலான தகப்பனார்களும் வெளியூர் / வெளிநாடுகளில் இருப்பதால் கண்டிக்கவும் வழிகாட்டவும் வாய்ப்புகள் குறைவு.

மாற்றத்துக்கான வழி:
குழந்தைகளுக்கு ஞாயிறுதோறும் மதரஸா அல்லாத சிறப்பு தீனியாத் வகுப்புகள் நடத்தி இஸ்லாமிய வாழ்க்கை நெறியை பயிற்றுவிக்க வேண்டும்.

மே /டிசம்பர் மாதங்களில் சிறப்பு விடுமுறை முகாம்கள் நடத்தி வெளியூர்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் தீனியாத் வகுப்புகள் எடுக்க வேண்டும்.

இதற்கு அந்தந்த முஹல்லாக்களில் முன்பு கூறியபடி பயிற்சி அளிக்கப்பட்ட வாலிபர்கள் / யுவதிகளை பயன் படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு சிறிய தொகை கொடுத்தால் உழைப்பின் முக்கியத்துவமும், தீனின் மகத்துவமும் அறிந்து கொள்வதோடு அனைத்து தரப்பினரின் விடுமுறை தினங்களும் பயனுள்ளதாக கழியும்.

10ஆம் வகுப்பு / +2 மாணவர்களுக்கு சிறப்பு கல்வி ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இதனால் மேற்கொண்டு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டல்கள் கிடைக்க ஏதுவாகும்.

ஓரளவு பாதுகாப்பான பள்ளிச்சூழல் மாறி பரந்த வெளி உலகத்தில் அடியெடுத்து வைக்கும் அவர்களுக்கு நண்பர்கள், இணையதளங்கள், இந்துத்வா சக்திகள் போன்றவை மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறித்தும் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான நிதி பெறுவது எப்படி?:
அல்ஹம்துலில்லாஹ் நமதூர் சகோதரர்கள் எல்லா துறைகளிலும் படித்து பட்டம் பெற்று வெளியூர் / வெளிநாடுகள் என பரவியுள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து

ஒரு பரந்த கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

அதன் உறுப்பினர்கள் அவரவரால் எப்படி முடியுமோ பணம் / நேரம் / திறமை இவற்றின் மூலம் ஏர்வாடியை வளப்படுத்த முடியும்.

மேற்கண்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து அவர்களின் நிர்வாகத்தில் ஒரு பைத்துல்மால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் எல்லா நற்காரியங்களுக்கும் நிதி திரட்ட முடியும். இன்ஸா அல்லாஹ்

அந்த பைத்துல் மால் அமைப்பு ஆண்டு தோறும் independent ஆடிட்டர்களால் தணிக்கை செய்யப் பட்டு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனால் அந்த அமைப்பு அனைத்து சாராரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான சிறப்பு மாநாடு ஒன்றை ஏர்வாடியில் நடத்த வேண்டும்.

இதனால் அனைவரிடத்தும் பரஸ்பர அன்பும் நட்பும் புரிந்துணர்வுகளும் ஏற்படும். ஊர் தொடர்புகள் விட்டுப் போகாது. மேலும் பல ஆக்கபூர்வமான பணிகளுக்கு இது தூண்டுகோலாக அமையும்.

முடிவுரை:
இங்கு எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் இந்த கட்டுரை போட்டியில் பங்களிக்கும் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் பரிசீலனை செய்து அனைவருக்கும் ஏற்புடைய கருத்துக்களை ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுத்து நாம் அனைவரும் முயற்சி செய்வோம். இன்ஸா அல்லாஹ் நம் தலைமுறையில் இல்லாவிட்டாலும், எதிர்கால சந்ததிகள் காலத்தில் நமது ஏர்வாடி மதீனாவாக மாறும். கருணையாளனாகிய அல்லாஹ் நம் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் வெற்றி அளிப்பானாக. நம் அனைவருக்கும் மறுமையில் சுவன பாக்கியத்தையும், நம் பெருமானார் (ஸல்) அவர்களின் தோழமையையும் அளிப்பானாக. ஆமீன்.






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..